மதுரவாயல் சுங்கச்சாவடி அருகே நள்ளிரவில் காரில் கடத்திச்சென்று பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது ஏன்? கைதான 6 பேர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: கஞ்சா போதையில் காருடன் பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது ஏன் என்பது தொடர்பாக கைதான 6 பேர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மதுரவாயல் புறவழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே கடந்த 6ம் தேதி நள்ளிரவு காரில் கடத்திச் சென்று பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக, எஸ்ஆர்எம்சி போலீசார் பிடிபட்ட சந்தோஷ் (21) அளித்த தகவலின்படியும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் படியும் குற்றங்களில் ஈடுபட்ட 6 பேர் மீது கற்பழிப்பு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இவர் அளித்த தகவலின்படி, கொளுத்துவான்சேரி சூர்யா என்ற சூர்ய பிரகாஷ் (21), அய்யப்பாக்கம் தினேஷ் (28), பெரிய கொளுத்துவான்சேரி குட்டி என்ற கருப்பயைா (27), ஆலப்பாக்கம் கணேஷ் புத்தூர் (19), பெரிய கொளுத்துவான் சேரி சுபாஷ் (19) ஆகிய 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து செயின், மோதிரம், செல்போன், ரூ.400 ரொக்கம், ஒரு கார் மீட்கப்பட்டது. தொடர்ந்து, 6 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். அதன்பிறகு தான் இதுபோல் எத்தனை பெண்களை அந்த கும்பல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது, நகைகள் எவ்வளவு வழிப்பறி செய்துள்ளனர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: நாங்கள் வழக்கமாக இரவு நேரத்தில் சாலையோரம் உள்ள நியாயவிலை கடையின் கட்டிடத்தின் மீது மது குடித்தபடி கஞ்சா அடிப்பது வழக்கம். கடந்த சனிக்கிழமை இரவு நண்பர்களுடன் ஒன்றாக கஞ்சா அடித்துக்கொண்டிருந்தோம். அப்போது, கால் டாக்சி ஒன்று வெகுநேரம் சாலையோரம் நின்றது. இதை பார்த்த நாங்கள் அந்த காரின் அருகே சென்றுபோது, கார் மட்டும் அசைவதை கவனித்தோம். நாங்கள் கஞ்சா போதையில் இருந்ததால் காரின் கண்ணாடி வழியாக உள்ளே பார்த்த போது, கார் டிரைவர்  பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை கண்டோம். காரின் கதவை தட்டி வெளியே வாருங்கள் என்று அழைத்தோம்.

அப்போது காரில் இருந்த பெண் எந்தவித பதற்றமும் இல்லாமல் கதவை தட்டிய எங்கள் நண்பனை சரமாரியாக அடித்துள்ளார். பிறகு காரில் இருந்த டிரைவரும் எங்களை தாக்கி விட்டு காரில் தப்பி செல்ல முயன்றார். ஆனால் நாங்கள், எங்கள் ஏரியாவில் வந்து தவறு செய்துவிட்டு, எங்களையே அடித்துவிட்டு தப்பி செல்கிறீர்களா என்று கூறி கார் டிரைவரை அடித்து கீழே தள்ளிவிட்டு பெண்ணுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று காருடன் அவரை கடத்தினோம். அப்போது நாங்கள் கஞ்சா போதையில் இருந்ததால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பெண்ணை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, அவரை கடுமையாக தாக்கியும், அவரது ஆடைகளை களைய செய்து நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்தோம்.

அப்போது அவர் விலை மாதுதான் என்று நினைத்தோம். ஆனால், தனது கணவருக்கு தெரியாமல் கால் டாக்சி டிரைவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தது எங்களுக்கு தெரியவந்தது. பிறகுதான் நாங்கள் அந்த பெண்ணை உனது கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் காரிலேயே உல்லாசமாக இருக்கும் அளவுக்கு தைரியம் இருக்கிறது. எனவே, எங்களுடனும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினோம். ஆனால் அவர், எங்கள் ஆசைக்கு இணங்கவில்லை. அப்போது கஞ்சா போதையில் இருந்த நண்பர்கள், இனி இதுபோன்று யாருடனும் கள்ளத்தொடர்பில் இருக்க கூடாது என்று கூறி, பெண்ணை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்தோம்.

அப்போது உடன் இருந்த நண்பர் ஒருவரை யாரேனும் வருகிறார்களா என காவலுக்கு நிற்கவைத்து விட்டு, மற்ற 4 பேரும் சேர்ந்து கை மற்றும் கால்களை பிடித்துக்கொண்டு மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தோம். அதோடு இல்லாமல் அவர் கழுத்தில் அணிந்து இருந்த தாலி செயின் உள்பட எட்டு சவரன் நகைகளையும் பறித்துக் கொண்டோம். கார் கதவை தட்டிய நபரை அந்த பெண் அடித்ததால் அவன் மட்டும், ஆத்திரத்தில் மீண்டும் இளம்பெண்ணுடன் ஒன்றாக இருந்தான். அப்போதுதான் போலீசார் டார்ச் லைட் அடித்தபடி எங்களை நோக்கி வந்தனர். அதை பார்த்து நாங்கள் தப்பி ஓடிவிட்டோம். ஆனால் பெண்ணுடன் இருந்த நபர் தப்பித்து ஓட முடியாமல் போலீசாரிடம் சிக்கிக் கொண்டான். இதனால் எங்களை போலீசார் எளிதில் பிடித்துவிட்டனர். நாங்கள் இந்த தவறை வேண்டும் என்றே செய்யவில்லை. எங்களை குற்றத்திற்கு தூண்டியது ெபண்ணின் அணுகுமுறை தான். இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

* சாலையில் அழகிகளை நிற்க வைத்து கொள்ளை

மதுரவாயல் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பெண், கால் டாக்சியை மறித்தார். பெண் என்று நினைத்து இறக்கப்பட்ட டிரைவர் காரை நிறுத்தினார். அப்போது மறைந்திருந்த சில இளைஞர்கள் வந்து கார் டிரைவரை மிரட்டி நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். இதில், ஒரு பெண் மட்டும் சிக்கினார். கடந்த ஜூலை 21ம் தேதி கல்லூரி மாணவர்கள் வாடகைக்கு எடுத்து சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இதனால் காரை வாடகைக்கு விட்ட நபர் கல்லூரி மாணவர்கள் 4 பேரை கடத்தி சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார். இதுபோல் பல சம்பவங்கள் மதுரவாயல் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

Related Stories: