ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பகுதியில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததையடுத்து மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படாததால் 1,200க்கும் மேற்பட்ட விசை படகுகள் கரையோரங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் இருந்து 50 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மறுஉத்தரவு வரும் வரை விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.