ஆம்பூர்: ஆம்பூரில் நேற்று காலை முதல் வெயில் அதிகமாக இருந்தது. திடீரென மாலையில் சில்லென்று காற்று வீசியதை தொடர்ந்து கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர், பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஆம்பூரில் ரெட்டிதோப்பு, பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளீல் கழிவுநீர் கால்வாய் நீர் மழைநீருடன் பெருக்கெடுத்து ஓடியது.இதில் ரெட்டிதோப்பு செல்லும் சாலையில் உள்ள ரயில்வே குகைவழி பாதை வழியாக கழிவுநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. ஆம்பூர் அடுத்த கரும்பூர் கால்நடை மருந்தகம் அருகே மாநில நெடுஞ்சாலையில் நேற்று மாலை காற்றுடன் பெய்த கனமழையால் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்தது. உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து சீரமைப்பு பணிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இதேபோல் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டில் சிவன்படைதெரு, வளையல்கார தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன. சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இந்த தெருக்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி மழை வெள்ளம் வரும் நேரத்தில் கழிவுநீர் மழைநீருடன் சேர்வதால் சாலைகள் வெள்ளக்காடாக, சேறும் சகதியுடன் காட்சியளித்து வருகிறது.