மோடி, யோகி படம் மீண்டும் குப்பையில்... உத்தர பிரதேசத்தில் பரபரப்பு

மதுரா: உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி, முதல்வர் யோகியின்  புகைப்படங்கள் மீண்டும் குப்பையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உபி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மதுரா மாவட்டத்தில் உள்ள கோசி கலன் மின் உற்பத்தி நிலையத்தில் பிரதமர் மோடி, முதல்வர் யோகியின் புகைப் படங்கள் குப்பையில் வீசப்பட்டு இருப்பதாக பாஜ இளைஞர் பிரிவு நிர்வாகிகள், முதல்வர் யோகிடமும், மின்துறை அமைச்சர் ஏகே. சர்மாவிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்கட்ட விசாரணையில், இந்த மின் உற்பத்தி நிலையத்தில் புதிதாக பணிக்கு சேர்ந்த மண்டல துணைப் பொறியாளர், இளநிலை பொறியாளர் அலுலகத்தை சுத்தம் செய்த போது, இந்த புகைப்படங்களை குப்பையில் வைத்து விட்டனர். சுத்தம் செய்த பிறகு அவற்றை துடைத்து சுவரில் மாட்டப்பட்டதும் தெரிய வந்தது. இது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வாரத்துக்கு முன்னர், இதேபோல் மதுரா நகரில் பிரதமர், முதல்வர் புகைப்படங்களை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற தொழிலாளி பணிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.

Related Stories: