குடியரசுத் தலைவர் ராம்நாத் பதவிகாலம் இன்றுடன் நிறைவு: இன்றிரவு மக்களிடையே உரை

புதுடெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவித்தின் பதவிகாலம் இன்றுடன் நிறைவு பெறுவதால், அவர் இன்றிரவு மக்களிடையே உரையாற்றுகிறார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இவர் நாட்டின் 14வது ஜனாதிபதியாக கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்றார். புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடைபெற்றது. பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21ம் தேதி அறிவிக்கப்பட்டது.

அதில், திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். இதையடுத்து, நாட்டின் 15வது குடியரசு தலைவராக திரவுபதி முர்மு நாளை (ஜூலை 25) காலை 10.30 மணிக்கு பதவியேற்கவுள்ளார். புதிய குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வழிவிட்டு ஜனாதிபதி மாளிகையிலிருந்து ராம்நாத் கோவிந்த் இன்று வெளியேறுகிறார். நேற்று அனைத்து கட்சி தலைவர்கள், எம்பிக்களுடன் பிரியாவிடை பெற்றார். இந்நிலையில், நாட்டு மக்களிடையே ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். இன்று இரவு 7 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் உரையாற்றும் ராம்நாத் கோவிந்த், தனது பதவிக்காலத்தில் வகித்த பொறுப்புகள், கடந்து வந்த பாதை ஆகியவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களிடம் விவரிக்க உள்ளார்.

Related Stories: