வங்கி ஊழியர் வீட்டில் 7 சவரன் கொள்ளை

பெரம்பூர்: பெரம்பூர் முத்துமாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன்(30), இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.  இவர்களது வீட்டின் மேல் தளத்தில் நிரஞ்சனின் அண்ணன் குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். நிரஞ்சனின் மனைவி ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளதால் அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை நிரஞ்சன் வழக்கம்போல் பணிக்கு புறப்பட்டு சென்றார்.

பின்னர் இரவு பணி முடித்து வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தன. இதுகுறித்து செம்பியம் குற்றப்பிரிவில் நிரஞ்சன் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கைரேகை பதிவுகளை எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: