திருவள்ளூர்: மேல்நல்லாத்தூர் பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலை ரசாயன கழிவுநீர் முக்கிய சாலையில் வெளியேற்றப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் பொக்லைன் இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் 5 வகையான பொக்லைன் இயந்திரங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தொழிற்சாலையில் ரசாயன கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை முறைப்படி அகற்றாமல் தொழிற்சாலைக்கு வெளியே மிகப்பெரிய கால்வாய் அமைத்து அதில் வெளியேற்றி வருவதாக கூறப்படுகிறது.