குடியாத்தம் அருகே பரபரப்பு மநீம மாவட்ட செயலாளர் துப்பாக்கி முனையில் கைது; கடத்துவதாக நினைத்து கர்நாடக போலீசாரை தாக்கிய கிராம மக்கள்

குடியாத்தம்: குடியாத்தம் அருகே மநீம மாவட்ட செயலாளரை கர்நாடக போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்து காரில் ஏற்றினர். ஆனால், அவர் கடத்தப்படுவதாக நினைத்து கர்நாடக போலீசாரை சுற்றிவளைத்து கிராம மக்கள் சரமாரியாக தாக்கினர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (39). மத்திய காவல் படை போலீசாக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் வசித்து நகரப் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். மநீம வேலூர் மாவட்ட செயலாளராக உள்ளார்.

இவருக்கு கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் கடன் பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பெங்களூரில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து பெங்களூரு போலீசார் சரவணனை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் சரவணன் நேற்று காலை ஓட்டலுக்கு செல்ல  பைக்கில் வந்துள்ளார். அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரிலிருந்து 4 பேர் இறங்கி சரவணனை வழிமறித்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் துப்பாக்கி முனையில் அவரை காரில் ஏற்றியுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதியினர் 4 பேரையும்   சுற்றிவளைத்து தாக்கியதோடு, குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு, சரவணன் மற்றும் 4 பேரை  போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அதில் காரில் வந்தவர்கள் கர்நாடக மாநிலம் ஏலங்க போலீஸ் எஸ்ஐ, ஏட்டு, காவலர் மற்றும் கார் டிரைவர் என்றும், சரவணன் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளதாகவும் தெரிய வந்தது. அவர்கள் மப்டியில் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் துப்பாக்கியை திருப்பி தந்து, சரவணனை அவர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குடியாத்தம் போலீஸ் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: