முத்துப்பேட்டை அருகே கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத பொது சுகாதார வளாகம்-நடவடிக்கை எடுக்கப்படுமா?

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையில் பொது சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாததால் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மருத்துவமனை சாலையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பேரூந்து நிறுத்ததிலிருந்து செல்லும் இந்த சாலையில்தான், ஊராட்சி மன்ற அலுவலகம், கூட்டு குடிநீர் திட்ட சம்பு மற்றும் அலுவலகம், கால்நடை மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி, வருவாய்த்துறை அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அரசு மருத்துவமனை, காவல் நிலையம், தபால் நிலையம் உட்பட அலுவலகங்கள் உள்ளன.

இந்தநிலையில் இப்பகுதி மக்கள் மலம் கழிக்க அப்பகுதியை சேர்ந்த திறந்தவெளி இடங்களை தேர்ந்து எடுப்பதால் அவர்கள் வசதிக்காக கடந்த 8 ஆண்டுக்கு முன்பு ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் நபார்டு திட்டம் நிதியில் ஆண்பெண் என தனித்தனியாக பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது.இதில் ஆண்களுக்கு என்று குளிக்க மற்றும் மலம் கழிக்க, சிறுநீர் கழிக்க என்று தனித்தனி வசதிகள், அதேபோன்று பெண்களுக்கு என்றும் தனித்தனியாக சகலவசதிகளுடன் கட்டப்பட்டது. இதனால் ஊராட்சி மன்றம், கால்நடை மருத்துவமனை உட்பட அணைத்து துறை அலுவலகத்திற்கு வரும் வெளிபகுதி மக்களுக்கும், இப்பகுதி மக்களுக்கும் வசதியாக இருக்கும் என நினைத்து கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகம் கட்டிய நாளிலிருந்து இன்றுவரை இன்னும் பயன்பாட்டுக்கு வராமலேயே கட்டிடம் மற்றும் உபகரணங்கள் வீணாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த பொது சுகாதார வளாகத்தின் நிலை இப்படி மாறியதால் அப்பகுதி பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருன்கிறனர். மேலும் அப்பகுதி திறந்தவெளி கழிப்பறையாக மாறியும் விட்டது. இதன்மூலம் அங்கு மிகப்பெரிய சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் கொசு உற்பத்தி அதகரித்துள்ளது எனவே.

இனியும் காலம் தாழ்த்தாமல் நாளுக்குநாள் வீணாகி வரும் இந்த சுகாதார வளாகத்தை இப்பகுதி பொதுமக்கள் பயனடையும் வகையில் குறிப்பாக பெண்கள் நலன் கருதியும், சுகாதார சீர்க்கேட்டை சரி செய்யும் வகையிலும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று இப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: