அமெரிக்காவில் 4 ஆண்டாக தலைமறைவான மோசடி மன்னன் பிடிபட்டார்

சென்னை: ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் வேணு மாதவ் குப்புரு (48). இவர் மீது விஜயவாடா போலீசில் பண மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல் உள்பட பல்வேறு புகார்கள் உள்ளன. எனவே விஜயவாடா போலீஸ் இவரை கைதுசெய்ய  முயற்சித்தனர். ஆனால் இவர் போலீசிடம் சிக்காமல், வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு விஜயவாடா போலீஸ் கமிஷனர், மாதவ் குப்புருவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் எல்ஓசி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை ஏர்பிரான்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் பாரீசிலிருந்து  சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.  அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதித்தனர். இந்த விமானத்தில் கடந்த 4  ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வேணு மாதவ் குப்புருவும் வந்திருந்தார். இவருடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்தனர் அதில் மாதவ் குப்புரு, கடந்த 4 ஆண்டுகளாக ஆந்திர மாநில  போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது.

மேலும் வேணு மாதவ் குப்புரு அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலிருந்து, பாரீஸ் வழியாக இந்த விமானத்தில் சென்னை வந்ததும் தெரியவந்து. உடனே மாதவ் குப்புருவை வெளியில் விடாமல் சுற்றி வளைத்து குடியுரிமை அலுவலக அறையில் அடைத்து வைத்தனர். பின்பு விஜயவாடா போலீஸ் கமிஷனருக்கு மாதவ் குப்புரு பிடிபட்டது குறித்து தகவல் கொடுத்தனர். போலீசார், அவரை விமான நிலைய போலீசில் ஒப்படைத்துவிடுங்கள். நாங்கள் வந்து அவரை கைது செய்து கொண்டு செல்கிறோம் என்றனர். இதையடுத்து அவரை குடியுரிமை அதிகாரிகள் விமான நிலைய போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

Related Stories: