குடும்ப சுமையால் வெளி உலகத்தையே பார்க்காதவர் தாயை 56 ஆயிரம் கிமீ ஆன்மிக பயணம் அழைத்து செல்லும் மகன்: திருப்பதியில் சுவாமி தரிசனம்

திருமலை: தந்தையின் மரணத்தால் வீட்டில் தவித்த தனது தாயை சுமார் 56 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து நாடு முழுவதும் உள்ள ஆன்மிக தலங்களுக்கு அழைத்துச்சென்று வருகிறார் அவரது மகன். அதன்படி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். கர்நாடக மாநிலம், மைசூரு அருகே உள்ள போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(45). இவர் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தாய் ரத்னம்மா(74). கிருஷ்ணகுமாரின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவர் இறந்ததால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனிமையை உணர்வதாக ரத்னம்மா, தனது மகனிடம் கூறி வருந்தியுள்ளார். அதற்கு ஆறுதல் கூறிய கிருஷ்ணகுமார், ‘அருகில் உள்ள ஹாசன் மாவட்டம் பேளூரில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று வரலாமா?’ என கேட்டுள்ளார். அதற்கு அவரது தாய், எனது வாழ்நாளில் பிரசித்திப்பெற்ற எந்த கோயிலுக்கும் சென்றதில்லை’ என ஆதங்கப்பட்டுள்ளார்.

இதனால் தனது தாயை ஆன்மிக சுற்றுலா அழைத்துச்செல்ல கிருஷ்ணகுமார் திட்டமிட்டார். அதன்படி கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி கிருஷ்ணகுமார் தனது தாயை ஆன்மிக சுற்றுலா அழைத்துச்செல்ல தொடங்கினார். இதற்காக தனது தந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய ஸ்கூட்டரில் தாயுடன் பயணத்தை தொடங்கினார். முதலில் பேளூர், ஓலேபீடு கோயிலுக்கு சென்ற அவர்கள் ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா, புதுவை, தமிழகம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டனர். அங்குள்ள இந்து கோயில்கள் மட்டுமின்றி பிற மத வழிபாடு தலங்களுக்கும் சென்றுள்ளனர்.

இதனிடையே, கடந்த 2020ல் கொரோனா பரவல் காரணமாக பல இடங்களில் கோயில்கள் மூடப்பட்டன. இதனால் பயணத்தை நிறுத்தி வைத்திருந்த அவர்கள் தற்போது மீண்டும் தங்களது ஆன்மிக பயணத்தை தொடங்கியுள்ளனர். கடந்த 2 ஆண்டு 9 மாதங்களில் சுமார் 56 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் ஸ்கூட்டரிலேயே இவர்கள் பயணம் செய்துள்ளனர். அதன்படி நேற்றுமுன்தினம் தனது தாயை திருப்பதிக்கு கிருஷ்ணகுமார் அழைத்து வந்தார். அங்கு திருச்சானூர் பத்மாவதி தாயார், கோவிந்தராஜசுவாமி, கபிலேஸ்வர சுவாமி உட்பட அனைத்து கோயில்களுக்கும் அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணகுமார் கூறியதாவது: ‘நாங்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்ததால் எனது தாய் பல ஆண்டுகளாக சமையலறையை விட்டு வெளியே வராமல் இருந்தார். இதனால் வெளி உலகமே தெரியாமல் இருந்தார். அவர் எந்த கோயிலுக்கும் சென்றதில்லை. ஆனால் கோயில்களுக்கு செல்லவேண்டும் என மனதுக்குள் ஆசையை மட்டும் வைத்திருந்தார். இருப்பினும் வீட்டு பணிகள் காரணமாக அவர் யாருக்கும் சிரமம் கொடுக்கக்கூடாது எனக்கருதி தனது ஆசையை வெளியே சொல்லாமல் குடும்ப நலத்தை மட்டுமே கவனித்து வந்தார்.

எனவே எனது தந்தையின் இறப்புக்கு பின்னர் தான், தாயிடம் மனம்விட்டு பேசும்போது பல விஷயங்கள் புரிந்தது. எனவே அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் நாடு முழுவதும் ஆன்மிக பயணத்தை கடந்த 2018ல் மேற்கொண்டேன். நான் திருமணம் செய்துகொள்ளாததால் சம்பாதித்த மொத்த பணத்தையும் எனது தாய்க்காக செலவு செய்கிறேன். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்ப்பார்கள். நாம் வளர்ந்த பின்னர் அவர்களை கடைசி காலம் வரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதுதான் ஒவ்வொரு வாரிசின் கடமை’ என்றார்.

Related Stories: