மேலூர் அருகே பயங்கரம் 3வது மனைவியை கொன்று எரித்த சென்னை வாலிபர் கைது: மாமனார், மாமியாரும் சிக்கினர்

மேலூர்: மேலூர் அருகே மூன்றாவது மனைவியை கொலை செய்து எரித்த கணவன், மாமனார், மாமியார் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி பொட்டப்பட்டியில் ஒரு தென்னந்தோப்பு உள்ளது. இங்கு கடந்த 29ம் தேதி இளம்பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக மேலூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கொலை செய்து எரிக்கப்பட்ட பெண் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் குட்டுபட்டி அருகே பஞ்சயம்பட்டியை சேர்ந்த ராசாத்தி (19) என தெரிய வந்தது. இவரை, அதே ஊரைச் சேர்ந்த கணவர் அர்ச்சுணன் (25), மாமனார் ராசு (50), மாமியார் அரியம்மாள் (48), உறவினர்கள் வல்லான் என்ற ரவி (42), சிவலிங்கம் (39) ஆகியோர் சேர்ந்து கொலை செய்து எரித்தது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில், நத்தம் பஞ்சயம்பட்டியை சேர்ந்த அர்ச்சுணன் முதலில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து, 10 நாட்களில் பிரிந்து விட்டார். குடும்பத்தினர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க, உடல் நிலையை காரணம் காட்டி அவரையும் பிரிந்து விட்டார். மூன்றாவதாக ராசாத்தியை ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. பெற்றோருடன் கூட்டு குடும்பமாக இணைந்து வாழ வேண்டும் என மனைவியை அர்ச்சுணன் வற்புறுத்தினார். அதற்கு ராசாத்தி மறுத்துள்ளார். வேறு வழியின்றி சென்னை விருகம்பாக்கத்தில் வேலை செய்யும் இடியாப்ப விற்பனை செய்யும் இடத்திற்கே மனைவியையும் அழைத்து சென்றுள்ளார். அங்கு ராசாத்தி வேறு சில ஆண்களுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் தகராறு இருந்துள்ளது.

 இதனைத்தொடர்ந்து கிராமத்திற்கு செல்லலாம் எனக் கூறி ராசாத்தி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு அர்ச்சுணன் கடந்த ஜூன் 28ல் மதுரை செல்லும் பஸ்சில் புறப்பட்டார். கொட்டாம்பட்டி பள்ளப்பட்டி அருகே இரவில் இவர்கள் பஸ்சை விட்டு இறங்கிய போது, அர்ச்சுணனின் பெற்றோர் அங்கு காத்திருந்தனர். குழந்தையை அவரது தாய் அரியம்மாள் வாங்கிக் கொண்டார். தென்னந்தோப்பு வழியாக நடந்து சென்றபோது, திடீரென கத்தியால் சரமாரியாக ராசாத்தியை, கணவர் அர்ச்சுணன், மாமனார் ராசு சேர்ந்து குத்தி கொலை செய்தனர்.

பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை தீ வைத்து எரித்தனர். இதன்பிறகு எதுவும் நடக்காதது போல், அர்ச்சுணன் சென்னை சென்றுவிட்டார். அங்கு சென்றதும், தனது மனைவியை காணவில்லை என ராசாத்தியின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்குள் பாதி எரிந்த நிலையில் இருந்த இளம்பெண்ணின் புகைப்படங்களை மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் போலீசார் வெளியிட்டு, அடையாளம் தெரிந்தவர்கள் கூறுமாறு தெரிவித்திருந்தனர். இதை பாரத்து ராசாத்தியின் பெற்றோர் வந்து, தாலியை வைத்து உறுதிப்படுத்தினர். இதையடுத்து 5 பேரையும் கொட்டாம்பட்டி போலீசார் கைது செய்து, நேற்று அதிகாலை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: