திருவள்ளூர் அருகே மனைவி, மகளை சரமாரியாக வெட்டிய கணவர் தலைமறைவு

திருவள்ளூர்: தனது மனைவி தொடர்ந்த விவாகரத்து வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான கணவர், நேற்றிரவு தனது மனைவி, மகளை கத்தியால் சரமாரி வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவர்கள் இருவரும் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே காக்களூர், அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் (எ) சேட்டு (52). இவருக்கு மனைவி மஞ்சுளா (48), மகள் ஜெயஸ்ரீ (23), மகன் விக்னேஷ் (21) ஆகியோர் உள்ளனர். இதற்கிடையே சந்திரனுக்கு அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 8 ஆண்டுகளாக தனியே பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. தனது தாய் மஞ்சுளாவுடன் மகள் ஜெயஸ்ரீ வசித்து வந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் தனது கணவரிடம் விவாகரத்து கேட்டு மஞ்சுளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை நீதிமன்றத்தில் மஞ்சுளாவின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது தனது தாய் மஞ்சுளாவுக்கு ஆதரவாக மகள் ஜெயஸ்ரீயும் ஆஜரானார். அதை பார்த்ததும் சந்திரன் ஆத்திரத்தில் இருவரையும் சரமாரி திட்டியபடி இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து, நேற்றிரவு 8 மணியளவில் மஞ்சுளா, ஜெய, அவரது அத்தை லட்சுமி ஆகிய 3 பேரும் வீட்டின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சந்திரன் (எ) சேட்டு, மனைவி மற்றும் மகளை தரக்குறைவாக திட்டியதுடன், என்மீதே வழக்கு போடுகிறீர்களா, தொலைச்சுடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அங்கிருந்த கீதா என்ற பெண் தட்டிக் கேட்டிருக்கிறார். இதில் ஆத்திரமான சந்திரன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தனது மனைவி மஞ்சுளா, மகள் ஜெயஸ்ரீ ஆகிய இருவரையும் சரமாரி வெட்டியுள்ளார். இதில் இருவருக்கும் தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது.

இதை பார்த்ததும் சந்திரன் தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த தாய், மகள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் மகன் விக்னேஷ் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திதரதாசன், தாலுகா இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து தாய், மகளிடம் தீவிரமாக விசாரித்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கணவர் சந்திரன் (எ) சேட்டுவை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: