ரவுடிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து; ரூ.20 லட்சத்தை பங்கு போட்ட இன்ஸ், 3 எஸ்ஐ சஸ்பெண்ட்; எஸ்பி அதிரடி நடவடிக்கை

திருமலை: ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், சீனிவாசபுரத்தில் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த நிஷாந்த் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தை சென்னையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் குத்தகைக்கு எடுத்து சிகரெட் பாக்கெட்டுகள், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், குடோனை காலி செய்யுமாறு நிஷாந்த் கேட்டுள்ளார். ஆனால், முத்துக்குமார் குடோனை காலி செய்ய முடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், நிஷாந்த் அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான சட்டக் கல்லூரி மாணவர் மணிகண்டா (29) என்பவரிடம் கட்டிடத்தை விற்குமாறு கூறினார். அதன்படி, அந்த கட்டிடத்தின் எதிரே வசிக்கும் டாக்டர் ரெஹ்மானுக்கு கட்டிடத்தை கடந்த பிப்ரவரி மாதம் விற்றுள்ளனர். விற்பனை செய்த பிறகும் காலி செய்ய மறுத்த முத்துக்குமார், இக்கட்டிடம் தனக்கு சொந்தமானது. அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளது எனக்கூறினார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் 9ம் தேதி மணிகண்டா திருப்பதியை சேர்ந்த இர்பான், மங்களம் பகுதியை சேர்ந்த னிவாஸ் மற்றும் சில ரவுடிகளிடம் உதவி நாடி உள்ளார்.

அவர்கள் திருச்சானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரேஷூ, ராமகிருஷ்ணா, மற்றொரு ராமகிருஷ்ணா ஆகியோர் உதவியுடன் குடோனை காலி செய்துள்ளனர். அப்போது, குடோனில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளை விற்று ரவுடிகளும், போலீசாரும் பங்கு போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதனால்,  இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், 3 எஸ்ஐ.க்களையும் எஸ்பி நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories: