திருவள்ளூர்: தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பாக திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற “நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படும் “கல்லூரி கனவுகள்” திட்டத்தின் மூலம் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். எம்எல்ஏ க்கள வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, ச.சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன் அனைவரையும் வரவேற்றார். உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,வருகின்ற கால கட்டத்தில் மாணவர்களாகிய நீங்கள் மற்றவர்கள் பேர் சொல்லும் அளவிற்கு உங்களுக்கான கல்வித் தரத்தையும், தகுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.