கேளம்பாக்கத்தில் போக்குவரத்து காவல் நிலையம் உருவாக்க வலியுறுத்தல்

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த சில காவல் நிலையங்களையும், சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் இருந்த காவல் நிலையங்களையும் பிரித்து சென்னைப் புறநகரான தாம்பரத்தில் புதிய காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டது. இந்த காவல் ஆணையரகம் தற்போது பெரும்பாக்கத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கரணையில் இணை ஆணையர் அலுவலகம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த இணை ஆணையரின் கட்டுப்பாட்டில் கேளம்பாக்கம் உதவி ஆணையர் அலுவலகம் வருகிறது. கேளம்பாக்கம், கானத்தூர், தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களும் மற்றும் விரைவில் தொடங்கப்பட உள்ள சிறுசேரி காவல் நிலையமும் இந்த கேளம்பாக்கம் உதவி ஆணையரின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

கானத்தூர், கேளம்பாக்கம், தாழம்பூர், செம்மஞ்சேரி ஆகிய காவல் நிலையங்களின் எல்லைக்குள் வாகன விபத்து நடந்து வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டாலோ, உயிர்ச்சேதம் ஏற்பட்டாலோ சென்னை தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில்தான் புகார் செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது உள்ளது. அங்கிருந்து போலீசார் வந்து விபத்து நடந்தது எப்படி, விபத்திற்கு காரணம் யார் என்பது குறித்து ஆய்வு செய்து புகைப்படங் களை எடுத்த பிறகே வழக்கு பதிவு செய்து வாகனம் சேதம் அடைந்ததற்கான சான்றிதழ் அல்லது உயிரிழப்புக்கான எப்ஐஆர் போன்றவற்றை வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பொதுமக்களுக்கு வீண் அலைச்சலை உருவாக்குவதாக கருத்து எழுந்துள்ளது. கானத்தூர், கேளம்பாக்கம், தாழம்பூர், செம்மஞ்சேரி ஆகிய காவல் நிலையங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கும் தாம்பரம், சிட்லபாக்கம் போக்குவரத்து காவல் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கும் வெகு தூரம் உள்ளது. ஆகவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க கேளம்பாக்கம் அல்லது நாவலூரில் போக்குவரத்து காவல் நிலையம் அமைத்து விபத்து குறித்த சான்றுகள், எப்.ஐ.ஆர். பெறுவதற்கு தாம்பரம் காவல் ஆணையர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தற்போது ஓஎம்ஆர்., ஈசிஆர் சாலைகளில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளதால் அந்தந்த காவல் நிலையங்களிலேயே போக்குவரத்துப் பிரிவை உருவாக்கி தனி போலீசாரை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: