ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கருணாகரச்சேரி கிராமத்தில் இடிந்து விழும்நிலையில் அரசு தொடக்கப்பள்ளி: புதிதாக கட்டித் தர பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் இடிந்து விழும்நிலையில் உள்ள 40 ஆண்டுக்கு பழமையான அரசு தொடக்கப்பள்ளியை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சி கருணாகரச்சேரி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இக்கட்டிடத்தில் அதே  கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி கட்டிடத்தில் ஆங்காங்கே சிமெண்ட் பூச்சு பெயர்ந்தும், மேற்கூரை ஓடுகள் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சம் அடைவதோடு, தயக்கம் காட்டி வருகின்றனர். இது சம்பந்தமாக பள்ளி கல்வித்துறை உயரதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பே பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: