ஜார்க்கண்ட்டில் நடந்த கூத்து காத்து வாக்குல ரெண்டு கல்யாணம்: 2 மனைவியையும் விட முடியாது என கணவன் அன்பு மழை

ராஞ்சி: தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றில், ஹீரோவை 2 பெண்கள் காதலிப்பார்கள். 2 பேரையும் ஹீரோ உயிருக்கு உயிராக காதலிப்பார். ஒருவரை விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருப்பார். ஆனால் ஒரே வீட்டில் ஒரே கணவருடன் 2 பெண்கள் குடும்பம் நடத்த முடியாது எனக் கூறி, 2 ஹீரோயின்களும் ஹீரோவை விட்டு பிரிந்து சென்று விடுவார்கள்.இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது நிஜத்திலேயே நடந்துள்ளது. ஒரே ஒரு வித்தியாசம். அதில் 2 பெண்களும் ஒரு சேர காதலித்த நபரை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்கடாவில் உள்ள பாந்த்ரா தொகுதி பண்டா கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப். கூலித் தொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்த குசும் லக்ரா என்பவரை சந்தீப் காதலித்தார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்ததால், திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன், மனைவியாக வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்ற போது சந்தீப் வாழ்வில் திருப்பம் ஏற்பட்டது.

அங்கு வேலைக்கு வந்த சுவாதி குமாரியிடம் சந்தீப் காதலில் விழுந்தார். அவரையும் உயிருக்கு உயிராக காதலித்தார். நாளடைவில் இவர்களது காதலை சந்தீப் மற்றும் குசும் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. ஆனால், 2 பெண்களும் முதலில் எதிர்த்தாலும் பின்னர் சந்தீப் சமாதானம் செய்து வைத்தார். இதனால் அவர்களது குடும்பத்தினரும் பெரிதாக எதிர்ப்பு காட்டவில்லை. ஒருவழியாக, 2 பெண்களையும் சந்தீப் திருமணம் செய்து கொள்ள முடிவானது. ஆனால் இதற்கு கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கிராமத்தையே எதிர்த்து சந்தீப் தனது காதலிகளான குசும் லக்ரா, சுவாதியை கரம் பிடித்தார். ஒரே சமயத்தில் இருவருக்கும் தாலி கட்டி திருமண பந்தத்தில் இணைந்தனர். இது குறித்து சந்தீப் கூறுகையில், ‘‘2 பெண்களை திருமணம் செய்து கொள்வதில் சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால் நான் இருவரையும் நேசிக்கிறேன். இவர்களில் ஒருவரை கூட விட்டு பிரிய முடியாது’’ என்றார். காத்து வாக்குல ரெண்டு கல்யாணம்.

Related Stories: