சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு ஒகேனக்கல் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி, ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் நேற்று, நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஆனால், சுற்றுலா பயணிகளின் வாகனங்களை 10 கிலோ மீட்டருக்கு முன்பே, போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் போலீசாருக்கும், வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு சில சுற்றுலா பயணிகள் பஸ்சில் பயணம் செய்து, ஒகேனக்கல்லில் குளித்தும், மீன்களை வாங்கி சாப்பிட்டும் மகிழ்ந்தனர். நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து குழந்தைகளுடன் வந்த சுற்றுலா பயணிகள், மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: