செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் பயன்பாட்டுக்கு வராத உயர்கோபுர மின்விளக்கு

புழல்: செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றன. செங்குன்றம் ஜிஎன்டி சாலை, சாமியார் மடம் சிக்னல் அருகே திருவள்ளூர் கூட்டு சாலை இணையும் இடத்தில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் புதிதாக ஒரு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. எனினும், கடந்த 2 ஆண்டுகளாக அந்த உயர்கோபுர மின்விளக்கு இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் அங்கு சாலை இணையும் பகுதியில் இரவு நேரங்களில் அதிகளவு வாகன விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

மேலும், இங்கு இரவு நேரங்களில் செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்களும் நடைபெற்று வருகின்றன.   எனவே, செங்குன்றம் ஜிஎன்டி சாலை சந்திப்பில் வாகன விபத்துகளை தவிர்க்க, இங்குள்ள உயர்கோபுர மின்விளக்கை பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: