பள்ளிப்பட்டு : திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா 30 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் ஒரு பகுதியாக ஆர்கே பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் ஏற்பாட்டில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொது மருத்துவம் மற்றும் ரத்ததான முகாமை திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம். பூபதி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். சோளிங்கர் தனியார் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கினர். மேலும் ரத்ததான முகாமில் ஏராளமான திமுகவினர் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். இதனை அடுத்து 999 பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டு 99 மரக்கன்றுகள் நடப்பட்டது. பேருந்து நிலையத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயந்தி சண்முகம் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், ஒன்றிய இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி அமைப்பாளர்கள் மாறன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஏற்பாட்டில் கட்சி கொடி ஏற்றப்பட்டு கல்வெட்டு திறந்து பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.