வேலூர்: ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் சூறாவளிக்காற்றுடன் பேய் மழை பெய்தது. மரம் விழுந்து பெண் பலியனார். மேலகுப்பத்தில் 20 ஹெக்டேர் வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது. தமிழகத்தில் நேற்று முன்தினம் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதேபோல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. மேலும் பலத்த காற்று வீசியதால், விவசாய பயிர்கள் சாய்ந்து நாசமானது. குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவிற்கு உட்பட்ட மேலகுப்பம் பகுதியில் சுமார் 20 ஹெக்டேரில் விவசாயிகள் வாழை பயிரிட்டிருந்தனர். அப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், மேலகுப்பம் கிராமத்தில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் அனைத்தும் அடியோடு சாய்ந்து நாசமானது. வாழைப்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.