வேலூரில் 4 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை எஸ்ஐக்களுக்கு 2 வாரத்துக்கு ஒருமுறை விடுமுறை அளிக்க விரைவில் அரசாணை: டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

வேலூர்: எஸ்ஐக்களுக்கு 2 வாரத்துக்கு ஒருமுறை விடுமுறை அளிக்க விரைவில் அரசாணை வெளியிடப்படும் என வேலூரில் 4 மாவட்ட அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வேலூர் சரக அளவிலான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வந்தார். அவரை சரக டிஐஜி ஆனி விஜியா, எஸ்பிக்கள் எஸ்பி ராஜேஷ் கண்ணன்(வேலூர்), பவன்குமார்(திருவண்ணாமலை), பாலகிருஷ்ணன்(திருப்பத்தூர்), தீபா சத்யன்(ராணிப்பேட்டை) ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து தொடர்ந்து டிஐஜி, எஸ்பிகள், ஏஎஸ்பி, ஏடிஎஸ்பிகள், டிஎஸ்பிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் வேலூர் சரகத்திலுள்ள 4 மாவட்டங்களில் குற்றங்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அதனை மேம்படுத்துவது குறித்தும், துப்பு துலங்காமல் நிலுவையிலுள்ள வழக்கு விசாரணைக்கு நடவடிக்கைகள் குறித்தும், ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளின் மீது எடுக்கப்பட்டு வரும் கடும் நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிர படுத்துதல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்துகளை தடுக்க சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்துவது குறித்தும், இணையதள குற்றங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், சைபர் கிரைம் பிரிவு காவலர்களுக்கு நிபுணர் தத்துவத்தை மேம்படுத்தி கொடுக்கப்படும் சிறப்பு அம்சங்கள் குறித்தும், பொது மக்கள் கொடுக்கும் புகார் மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்களின் குறைகளை விரைந்து களைய எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் டிஜிபி கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில், ‘‘காவல் துறையில் ஏற்கனவே காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு 2 வாரத்திற்கு ஒருமுறை விடுப்பு வழங்குவது குறித்து தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். இதுதொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும்’’ என்றார்.

* வெளிமாநிலத்தவர்கள் கணக்கெடுப்பு

டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில், ‘‘வடமாநிலத்தவர்களால் கொலை சம்பவம் என்பது ராமேஸ்வரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி தான். இதுதொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் தற்போது வட மாநிலத்தவர்கள் கணக்கெடுப்பு நடந்துள்ளது. பல்வேறு நகரங்களிலும்  வெளிமாநிலத்தவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியானது நடந்து வருகிறது. வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பணியில் சேர்ப்பதற்கு முன்னதாக அவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளனவா என்பதை தொழில் வழங்குபவர்கள் உறுதி செய்ய வேண்டும். காவல்துறை சார்பிலும் நடத்தை பரிசோதனை நடத்தப்படுவதற்கான அமைப்புகள் உள்ளது. காவலன் செயலியிலும் அதற்கான வசதிகள் உள்ளது’’ என்றார்.

Related Stories: