தவளக்குப்பம் : புதுச்சேரி தவளக்குப்பம் அருகே ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் 5 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம் அருகிலுள்ள தேடுவார்நத்தம் குருநகரில் ஒரு கும்பல் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தவளக்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்ற 5 பேரை பிடித்து சோதனையிட்டதில் கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் நல்லவாடு குமரகுரு (19), தானம்பாளையம் பிளேடு விஷ்ணு (20), கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பில்லாளிதொட்டி சூர்யா (23), மணமேடு அருள்குமரன் (26), நோணாங்குப்பம் சந்தோஷ் (19) ஆகியோர் என தெரியவந்தது.