சென்னை: உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன் செஸ் தொடரின் பைனலில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா சீனாவின் டிங் லிரெனுடன் மோதுகிறார்.உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் ‘மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின்’ செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன் சதுரங்கப் போட்டி பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா (16 வயது) அரையிறுதிக்கு முன்னேறினார். அதில் நெதர்லாந்தைச் சேர்ந்த அனீஷ் கிரி உடன் மோதினார். இருவரும் விடாப்பிடியாகப் போராடியதால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. அதில் பிரக்ஞானந்தா 1.5 - 0.5 என்ற புள்ளி கணக்கில் வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார். பைனலில் அவர் உலகின் 2ம் நிலை வீரரான டிங் லிரெனை (சீனா) எதிர்கொள்கிறார். இறுதிப் போட்டி 2 நாட்களாக நடைபெறுகிறது (மே 25,26).