செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் நடராஜன் (63). இவருக்கு சென்னை தரமணியில் சொந்தமாக வீடு உள்ளது. அங்கு மராமத்து வேலைகள் நடக்கின்றன. அதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன் நடராஜன், குடும்பத்துடன் சென்னை சென்றார். நேற்று மாலை செங்கல்பட்டு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து, அதில் வைத்திருந்த 40 சவரன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.2.5 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.