செஸ் ஒலிம்பியாட் - ஒப்பந்தம் கையெழுத்து; சென்னையில் செப்.26 முதல் உலக மகளிர் டென்னிஸ் போட்டி!: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

சென்னை: சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 26ம் தேதி வரை நடைபெற உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், 21 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்று வந்த சென்னை ஓபன், 2017ம் ஆண்டு முதல் புனேவில் நடைபெற்று வருகிறது. மீண்டும் இந்த ஆண்டு முதல் சென்னை ஓபன் நடைபெறும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி தற்போது சென்னையில் நடைபெறும்.

WTA எனப்படும் பெண்கள் டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னையில் வரும் செப்டம்பர் மாதத்தில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படும். சென்னை ஓபன் டென்னிஸ் நடத்துவதற்காகவும் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடத்த முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்போருக்காக 2,600 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர் அறிவித்துள்ளார் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: