தோகைமலை பகுதியில் அறுவடைக்கு தயாரான கம்பு சாகுபடி-விவசாயிகள் மகிழ்ச்சி

தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் அறுவடைக்கு தயாராக வரும் கம்பு சாகுபடியால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சிறுதானிய பயிர்களில் மிகவும் முக்கியமான சத்து மிகுந்த பயிராக கம்பு உள்ளது. தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் உணவு பயிர்களில் நெல், சோளத்துக்கு அடுத்துபடியாக கம்பு பயிரை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். குறைந்த நீர் வளம், மண் வளம் உள்ள இடங்களில் கம்பு பயிர் செழித்து வளரக்கூடியது என்றும், உணவு தன்மைகளிலும் அதிகமான சத்து பொருட்களை பெற்றது என்றும் தெரிவிக்கின்றனர். கம்பு தானியமாக இருப்பதோடு இதன் தட்டை பகுதிகள் கால்நடைகளுக்கும் நல்ல தீவனமாகவும் உள்ளது.

அரிசியை மட்டுமே உண்பதால் ஏற்படும் சத்து குறைபாடுகளை போக்குவதற்கு கம்பு மிகச்சிறந்த தானியமாக இருப்பதாக முன்னோடி விவசாயிகள் கூறுகின்றனர்.

விதை நேர்த்தி செய்வதற்கு ஒரு கிலோ விதையுடன் மெட்டலாக்சில் 6 கிராம் என்ற விகிதத்தில் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு சற்று முன்பு அசோஸ் பைரில்லாம் கலந்தபின்பு விதைக்க வேண்டும். விதைக்கும் போது வரிசைக்கு வரிசை 45 செ.மீ இடைவெளியும், செடிக்கு செடி 15 செ.மீ இடைவெளியும் இட வேண்டும் என்று கூறுகின்றனர்.

பயிரை பாதுகாக்கும்போது குருத்து ஈக்களை கட்டுப்படுத்த 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளிக்க வேண்டும். கதிர் நாவாய் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த 25 கிலோ கார்பரில் 5 சதவீதம் மாலத்தியான் ஆகியவற்றை பூ எடுக்கும் சமயத்தில் தூவ வேண்டும். மேலும் அடிசாம்பல் நோயை கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேருக்கு 500 கிராம் மெட்டாலாக்சில் அல்லது 1 கிலோ மேன்கோசெப் தெளிக்க வேண்டும். துரு நோயை கட்டுப்படுத்துவதற்கு ஒரு ஹெக்டேருக்கு நனையும் கந்தகம் 2.5 கிலோ அல்லது மேன்கோசெய் 1 கிலோ தெளிக்க வேண்டும்.

தேவைபட்டால் 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு பாதுகாக்கப்பட்ட கம்பு பயிர்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தை தரும் தானியங்கள் கடினமாக இருக்கும். அப்போது கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து ஒரு வாரம் கழித்து கம்பு பயிர் தட்டையை வெட்டி நன்றாக காயவைத்து கால்நடை தீவனங்களுக்காக சேமிக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். மேற்படி கம்பு பயிரை பயிரிட்டால் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம் என்றும் முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: