புதுடெல்லி:தலைநகர் டெல்லியின் நிர்வாக அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் நிர்வாக அதிகாரம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, டெல்லி அரசும், டெல்லி துணை நிலை ஆளுநரும் இணக்கமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியது. இந்நிலையில், அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பது, பணியிட மாற்றம் செய்வதற்கான அதிகாரம் மற்றும் திருத்தப்பட்ட அதிகாரப் பகிர்வு சட்டங்கள், வணிக பரிவர்த்தனை விதிகள் ஆகியவற்றை எதிர்த்து டெல்லி அரசு தரப்பில் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.