திருமலை: நான்கு நாட்கள் தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் குவிந்ததால், 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. சனி, ஞாயிறு மற்றும் நேற்று ரம்ஜான் பண்டிகை விடுமுறை காரணமாக சில மாநிலங்களில் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் அதிகாலை முதல் இரவு வரை 65 ஆயிரத்து 756 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 34 ஆயிரத்து 774 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் நேற்று முன்தினம் ஒரேநாளில் உண்டியலில் ரூ.4.60 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கோயிலில் இலவச தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 20 அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் 6 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.