வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

திருச்செந்தூர்: தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முன்கூட்டியே விடப்படுமா? என்று கேட்கிறீர்கள். ஆட்சிப் பொறுப்பேற்றதும், முதல் 4, 5 மாதங்களில் கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் பள்ளிகள் திறப்பதற்கு தாமதமாகி விட்டது. இதனால் இன்னும் பல பாடங்கள் நடத்தப்படாமல் உள்ளது. பள்ளிக்கு கோடை விடுமுறை விடுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

கொரோனா காலத்தில் மாணவர்கள் வீட்டில் முழுமையாக இருந்ததால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுப்போம். மேலும் முன்பெல்லாம் பள்ளிகளில் கலாச்சார விழாக்கள் நடைபெறும். அதிலும் நடனம், கலைநிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்பார்கள். அதுபோன்ற நிகழ்ச்சிகள் அனைத்து பள்ளிகளிலும் நடத்த ஏற்பாடு செய்யப்படும். இருப்பினும் பெற்றோர்களுக்கும் மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்துவதில் பெரும் பங்கு உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு 47 லட்சத்திலிருந்து 53 லட்சமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: