பேராவூரணி அருகே கல்லணை கால்வாயின் குறுக்கே சேதமடைந்து வரும் பாலம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பேராவூரணி: பேராவூரணி அருகே கல்லணைக் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் சேதமடைந்து வருவதால் அதனை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் தஞ்சாவூர் - சாயல்குடி மாநில நெடுஞ்சாலையில் (SH29) ஆவணம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றின் குறுக்கே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டுள்ளது.

தற்போது இப்பாலத்தின் நடுவில் சிமெண்ட் காங்கிரீட் தரைத்தளம் சேதமடைந்து, அதில் உள்ள கம்பிகள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியே நீட்டியவாறு உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் டயர் அடிக்கடி பஞ்சர் ஆகி விடுகிறது. சிமென்ட் காரை அவ்வப்போது பெய்யும் மழை காரணமாகவும், கனரக வாகனங்களின் அழுத்தம் காரணமாகவும் சிறிது சிறிதாக சேதமடைந்து வருகிறது. எனவே, பாலம் முழுவதும் சேதமடைவதற்கு முன்னதாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டு சேதமடைந்த இடத்தை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: