மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்; நீதிபதியை மாற்றக்கோரி கெஜ்ரிவால் புதிய மனு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

 

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை விடுவித்து விசாரணை நீதிமன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, கடந்த 9ம் தேதியன்று விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு ‘முதல் பார்வையில் தவறானது போல தெரிகிறது’என்று கருத்து தெரிவித்து நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் இந்த வழக்கை நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா அமர்விலிருந்து வேறு அமர்விற்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயாவிடம் நிர்வாக ரீதியாக முறையிடப்பட்டது.

இந்த கோரிக்கையை கடந்த 13ம் தேதியன்று நிராகரித்த தலைமை நீதிபதி, நீதிபதிகள் ஒதுக்கீடு முறைப்படியே இந்த வழக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், ஒரு வழக்கில் இருந்து விலகுவது என்பது சம்பந்தப்பட்ட நீதிபதியின் தனிப்பட்ட முடிவு என்றும் தெரிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த கெஜ்ரிவால், தங்களுக்கு இந்த விசாரணையில் நியாயம் கிடைக்காது என்ற அச்சம் உள்ளதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32ன் கீழ் மனுத்தாக்கல் செய்துள்ளார். இன்று இந்த மனு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

அதே வேளையில், உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்னிலையிலும் சிபிஐயின் மனு பட்டியலிடப்பட்டுள்ளது. தனது மனுவில் கெஜ்ரிவால் தரப்பு, ‘எங்களது தரப்பு வாதங்களை முழுமையாக கேட்காமலேயே விசாரணை நீதிமன்ற தீர்ப்பு தவறானது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதே நீதிபதி முன்பு விசாரணை நடந்தால் ஒருதலைப்பட்சமாக இருக்க வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த சட்டப்போராட்டம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: