கிணத்துக்கடவு அருகே கேஸ் நிரப்பும் மையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தையில் இண்டேன் ஆயில் கார்ப்பரேஷன் கேஸ் நிரப்பும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கோவை, மேட்டுப்பாளையம், நீலகிரி, ஈரோடு, பெருந்துறை, பவானிசாகர்,  கோபி, சத்தியமங்கலம், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில்,  பல்லடம், திருப்பூர்,  மடத்துக்குளம், பழனி, ஒட்டன்சத்திரம்,  திண்டுக்கல், வால்பாறை, மற்றும் கேரளா மாநிலம் ஆகிய இடங்களுக்கு லாரி மற்றும் டேங்கர் லாரி மூலம் கேஸ் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், நிறுவனத்தில் பகல் 11 மணி அளவில் திடீரென்று கேஸ் நிரப்பும் நிறுவனத்தின் இடத்தில் இருந்து அபாய சங்கு ஒலித்தது.

இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த ஒத்திகை பயிற்சி குறித்து கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது கேஸ் கழிவு மற்றும் தீ ஏற்பட்ட இடத்தில் நவீன கருவிகள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.  தண்ணீரை பீய்ச்சி அடித்தது விபத்து எற்படாமல் தடுத்தனர். இதற்கிடையே  தீக் காயமடைந்த ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி டாக்டர்கள் மற்றும் அவரது குழுவினர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் காட்சி தத்ரூபமாக செய்து காட்டினார்கள். தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சரவணன் முன்னிலையில் முதுநிலை மேலாளர்  (ஆலை) சுந்தர் தலைமையில் ஒத்திகை நடைபெற்றது. அதிகாரிகள், ஊழியர்களின் செயல்பாட்டை பெரியகளந்தை இண்டேன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள், பாராட்டினர்.இதில் இருகூர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பரஸ்பர உதவி ஒப்பந்த உறுப்பினர்கள், மற்றும் இந்தியன் ஆயில் ஏர்போர்ட் டெர்மினல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: