ஊட்டி கலெக்டர் பங்களாவில் நள்ளிரவில் உலா வந்த சிறுத்தை: வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி

ஊட்டி: ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் குடியிருப்பு வளாகத்திற்குள் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை ஒன்று ஹாயாக உலா வந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டரின் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகம், பிங்கர்போஸ்ட் அருகே தமிழகம் ஆய்வு மாளிகை அருகே அமைந்துள்ளது. தற்போது, மாவட்ட கலெக்டராக உள்ளவர் அம்ரீத். இவர் இங்கு தான் வசித்து வருகிறார். இந்த பங்களாவின் நுழைவாயில் பகுதியில் இருந்து சாலை மற்றும் இருபுறமும் புல்வெளிகளுடன் கூடிய சிறு பூங்கா உள்ளது. சுற்றிலும் தடுப்புசுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பங்களாவிற்கு அருகே வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனங்களில் சிறுத்தை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் உள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை  ஒன்று, கலெக்டர் குடியிருப்பு வளாகத்திற்குள் புகுந்து அங்குள்ள சாலையில் ஹாயாக உலா வந்தது. கலெக்டரின் கார் பார்க்கிங் வரை சாவகாசமாக நடந்து வந்தது. சிறிது நேரம் அங்கிருந்த சிறுத்தை மேற்புறம் உள்ள மலர் செடிகளுக்கு நடுவே ஏறி தடுப்புச்சுவரை தாண்டி வெளியில் சென்று மறைந்தது. கலெக்டர் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். சிறுத்தை உலா வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதனிடையே, தமிழகம் மாளிகை மற்றும் கலெக்டர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: