காரில் கருப்பு ஸ்டிக்கர் விவகாரம்; நடிகர் நாக சைதன்யாவுக்கு அபராதம்: ஐதராபாத் போலீசார் அதிரடி

ஐதராபாத்: விதிமுறைகளை மீறி காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்த நடிகர் நாக சைதன்யாவுக்கு போலீசார் ரூ. 700 அபராதம் விதித்து பணத்தை வசூலித்தனர். தெலங்கானா மாநில போலீசார் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பில் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் தங்களது கார்களில் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத கார்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரை மடக்கி போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் ஐதராபாத் அடுத்த ஜூப்ளி ஹில்ஸ் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் கார் வந்தது. அந்த காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

உடனடியாக காரை மடக்கிய போலீசார், டிரைவரிடம் ரூ.700 அபராதம் விதித்து பணத்தை வசூலித்தனர். அப்போது நடிகர் நாக சைதன்யா காரில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர்கள் அல்லு அர்ஜுன், என்டிஆர், மஞ்சு மனோஜ் ஆகியோரின் கார்களுக்கு போலீசார் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: