ராம நவமி ஊர்வலத்தின் போது வெடித்த கலவரம்: விதிமீறல்களுடன் கட்டப்பட்டுள்ளதாக கூறி 50 கட்டிடங்கள் இடிப்பு

போபால்: மத்தியப்பிரதேசத்தில் ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை ராம நவமி ஊர்வலத்தின் மத்தியப்பிரதேசம், கர்கோன் பகுதியில் உள்ள மசூதி முன்பு கலவரம் வெடித்தது. இதில் கல்வீச்சு மற்றும் வன்முறையால் 27 பேர் காயமடைந்தனர். 12 வீடுகள் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த கலவரம் தொடர்பாக 14 சிறுவர்கள் உள்ளிட்ட 84 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள், கடைகள் விதிமீறல்களுடன் கட்டப்பட்டுள்ளதாக கூறி புல்டோசர் உதவியுடன் 50 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. வன்முறையால் பொதுசொத்துக்கள் சேதமடைந்ததால் மத்தியப்பிரதேச அரசின் வழிகாட்டுதலோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரக்காரர்களிடமிருந்தே பொது சொத்துக்கள் சேதப்படுத்தியதற்கான தொகையும் பெறப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Related Stories: