நடிகை பலாத்கார வழக்கு விசாரணைக்கு ஆஜராக காவ்யா மாதவன் மறுப்பு

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று நடிகை காவ்யா மாதவன் குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் அனுப்பியுள்ளார். பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் 8வது நபராக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கும் இந்த வழக்கில் தொடர்பிருப்பது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்தனர். இதைதொடர்ந்து இன்று (11ம் தேதி) விசாரணைக்கு ஆஜராகுமாறு  காவ்யா மாதவனுக்கு குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில் தன்னால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று கூறி காவ்யா மாதவன் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அனுப்பியுள்ளார். தற்போது, தான் சென்னையில் இருப்பதால் 11ம் தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராக முடியாது என்றும் 13ம் தேதி மதியம் தன்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை மஞ்சு வாரியரிடம் விசாரணை

நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும், நடிகையுமான மஞ்சுவாரியரிடம் நேற்று குற்றப்பிரிவு போலீசார் திடீர் விசாரணை நடத்தினர். அப்போது, சில டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கின. அதில் நடிகர் திலீப், காவ்யா மாதவன் உள்பட சிலரது ஆடியோக்கள் இருந்தன. அதை உறுதி செய்வதற்காகவே விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Related Stories: