இஸ்லாமாபாத் : பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கு ஒன்றில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனரான ஹபீஸ் சயீத்திற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. ஹபீஸ் சயீத்தின் சொத்துக்களை முடக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹபீஸ் சயீத் கட்டிய மசூதி மற்றும் மதரஸா ஆகியவற்றை அரசு கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் மதிப்பில் ரூ.3.40 லட்சம் பணம் அபராதமும் விதித்து லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்ற நீதிபதி நீதிபதி இஜாஸ் அகமது புட்டார் தீர்ப்பளித்தார்.2008ம் ஆண்டு நவம்பரில் நடந்த மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் தற்போது பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். 70 வயதான ஹபீஸ் சயீத் ஏற்கனவே வேறொரு வழக்கில் 36 ஆண்டு கால சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.