புதுடெல்லி: கர்நாடகா பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது தொடர்பாக சர்வதேச தீவிரவாத அமைப்பான அல் கொய்தாவின் தலைவன் அல் ஜவாஹிரி வீடியோ வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘கர்நாடகா பள்ளிகளில் சீருடைய மட்டுமே அணிய வேண்டும். ஹிஜாப் அணிந்து செல்லக் கூடாது,’ என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச தீவிரவாத அமைப்பான அல்-கொய்தாவின் தலைவன் அல்-ஜவாஹிரி, வீடியோ உரையை நேற்று வெளியிட்டுள்ளான். 8.43 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த வீடியோவில், ‘இந்து இந்தியாவின் உண்மை நிலையையும், அது பின்பற்றும் பல மத ஜனநாயகத்தின் ஏமாற்றுத்தனத்தையும் இந்த வீரப் பெண்மணி அமலப்படுத்தி இருக்கிறார். நம்மை சூழ்ந்துள்ள மாயைகளில் இருந்து விடுபட வேண்டும். இந்தியாவின் போலி மத ஜனநாயக பிம்பத்தால் நாம் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இது, முஸ்லிம்களை அடக்குவதற்கான கருவியே தவிர வேறு ஒன்றுமில்லை. ஹிஜாப்பை பல மேற்கத்திய நாடுகள் தடை செய்துள்ளன. ஹிஜாப்புக்கு எதிரான நாடுகளுடன் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் கூட்டணி வைத்துள்ளன,’ என்று கூறியுள்ளார்.