சென்னை: தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தை முற்றுகையிட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். கொரோனா பரவலின்போது, கடந்த 2020ம் ஆண்டு மருத்துவ தேர்வாணையம் மூலம் 2400 செவிலியர்கள் நிரந்தரமாகவும், 800 செவிலியர்கள் தற்காலிகமாகவும், பணியமர்த்தப்பட்டனர். கடந்த மாதம் நிதிப்பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, தற்காலிக செவிலியர்கள் 800 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.