டெல்லி: சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் இன்று தனிநபர் மசோதாவை தாக்கல் செய்கிறார். தற்போதைய அரசியலமைப்பு பிரிவுகளின்படி சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுப்பதற்கு தற்போது கால வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே நீட் போன்ற முக்கிய மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் போட்டுவிடுகிறார்கள். இதனால் மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக நிறைவேற்றும் மசோதாக்கள் செயல் வடிவம் பெற பல மாதங்கள் கால தாமதமாகின்றன.