விழுப்புரம்: அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நேற்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் நடைபெற்றது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நகர செயலாளர்களுக்கான உட்கட்சி தேர்தல் நேற்று நடந்தது. தேர்தல் பொறுப்பாளராக நாகை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கோலியனூர் ஒன்றியத்தை சேர்ந்த பொருளாளர் அன்பழகன் தனது பதவிக்கு, மீண்டும் பணம் கட்ட சென்றுள்ளார். அப்போது அவரை பணம் கட்ட விடாமல் தடுத்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அதிமுக கட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கட்சி அலுவலகத்திலிருந்து வெளியே வந்த தேர்தல் பொறுப்பாளர் ஓ.எஸ்.மணியன் காரை மறித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.