சார்ஜா, துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1.15 கோடி தங்க கட்டி மின்சாதனம் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த 32 வயது ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரது சூட்கேசை சோதனையிட்டனர். அதில் மின்னணு சாதனங்கள் மறைத்து வைத்திருப்பதும், அதற்குள் 300 கிராம் எடையுள்ள தங்க கட்டி மறைத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர். மதிப்பு ரூ.15 லட்சம். மின்னணு சாதனங்களின் மதிப்பு ரூ.26 லட்சம். இதையடுத்து ரூ.41 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம், மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். இதே போல், துபாயில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ்  விமானத்தில் பயனித்த சென்னையை சேர்ந்த வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, உடமைகளில் எதுவும் இல்லை. சந்தேகம் தீராததால் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டபோது, உள்ளாடைக்குள் 2 பார்சல்கள் மறைத்து வைத்திருந்தார். அதை எடுத்து பிரித்து பார்த்தபோது தங்க பசை இருந்தது. மதிப்பு ரூ.74 லட்சம். தங்கப்பசையை பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.

Related Stories: