புதுடெல்லி: வேலை கிடைக்காமல் இளைஞர்கள் தற்கொலை செய்கின்றனர். இதை தடுக்க 10 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்ப கோரி மக்களவையில் டிஆர்எஸ் எம்பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். மக்களவை நேற்று கூடியதும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) கட்சி எம்பி நம நாகேஸ்வர ராவ் தலைமையில், அக்கட்சி உறுப்பினர்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து நாட்டில் நிலவும் வேலையில்லா பிரச்னை குறித்து பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கைகளில் பதாகைகள் வைத்திருந்த அவர்கள், ‘வேலையில்லாத பிரச்னையால் இளைஞர்கள் தற்கொலை செய்கின்றனர். இதை தடுக்க வேலை இல்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஒன்றிய அரசு துறையில் காலியாக உள்ள 10 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கோஷம் எழுப்பினர். ஆனால், கேள்வி நேரத்தில் அவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா மறுத்து விட்டார். இதையடுத்து, டிஆர்எஸ் எம்பி.க்கள் 9 பேரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.