சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ₹26.96 லட்சம் உண்டியல் காணிக்கை

*80 கிராம் தங்கம், 340 கிராம் வெள்ளி இருந்தது

சோளிங்கர் : சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பக்தர்கள் ₹26.96 லட்சம் உண்டியல் காணிக்கையாக செலுத்தினர். மேலும் 80 கிராம் தங்கம், 340 கிராம் வெள்ளியும் இருந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்நிலையில் கோயில் உதவி ஆணையர் ஜெயா, காஞ்சிபுரம் உதவி ஆணையர் தியாகராஜன், கோயில் தீர்த்தங்கார் கே.கே.சி.யோகேஷ் ஆகியோர் முன்னிலையில்  லட்சுமி நரசிம்மர் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் கண்காணிப்பாளர்கள் சுரேஷ், விஜயன், திருத்தணி ஆய்வர் நிர்மலா, அரக்கோணம் ஆய்வர் பிரியா  ஆகியோர் மேற்பார்வையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.

இதில் பக்தர்கள் காணிக்கையாக ₹26 லட்சத்து 96 ஆயிரம் மற்றும் 80 கிராம் தங்கம், 340 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள்  மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த பணிகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்பு கடந்த ஜனவரி 5ம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: