திண்டுக்கல்: தேசிய அளவிலான சேவல் கண்காட்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் கிளிமூக்கு, விசிறிவால் உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட சேவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் 7வது ஆண்டு தேசிய அளவிலான சேவல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சேவல்களுடன் கலந்து கொண்டனர். கண்காட்சியில் கிளிமூக்கு, விசிறிவால், கருங்கீரி, செங்கீரி, மயில் கீரி, செம்பொன்ராம் உள்பட 400க்கும் மேற்பட்ட சேவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உடலமைப்பு, வாலின் நீளம், மூக்கின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த சேவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.