நின்றிருந்த டிரெய்லர் மீது கார் மோதல் விபத்தில் பலியான நடிகருடன் இருந்தது காதலி ரீனா ராய்: கடைசியாக எடுத்த காதலர் தின புகைப்படம் வைரல்

சண்டிகர்: பஞ்சாப்பில் விபத்தில் பலியான நடிகர் தீப் சிங் சித்துவுடன் இருந்தது அவரது காதலி ரீனா ராய் எனவும், அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஜனவரியில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில், செங்கோட்டையில் அத்துமீறிக் கொடி ஏற்றப்பட்டது. இதனை ஏற்றிய பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து (38) கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் இவர் நேற்றிரவு நடந்த கார் விபத்தில் பலியானார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘டெல்லியின் குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) எக்ஸ்பிரஸ்வே சாலையில், பஞ்சாப் அடுத்த பதிண்டா நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது நின்றிருந்த டிரெய்லர் டிரக் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியது. அந்த விபத்தில் சம்பவ இடத்தில் தீப் சிங் சித்து பலியானார். அவருடன் சென்ற பெண் படுகாயமடைந்தார். விசாரணையில், விபத்தில் உயிரிழந்த தீப் சிங் சித்துடன் சென்றது அவரது காதலி ரீனா ராய். தற்போது அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கு காரணமான கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தீப் சிங் சித்து - ரீனா ராய் ஜோடி, காதலர் தினத்தை (பிப். 14) கொண்டாடி விட்டு திரும்பிய போது விபத்தில் சிக்கியுள்ளனர்.

காதலர் தினத்தன்று சேர்ந்து அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீனா ராய் பகிர்ந்துள்ளார். இதுதான் தீப் சித்துவின் கடைசி புகைப்படம். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர். நடிகர் தீப் சிங் சித்து விபத்தில் பலியான சம்பவம், பஞ்சாப், அரியானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: