கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை மையம் தகவல்

சென்னை: கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்  காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அதேபோல் 14ம் தேதி(நாளை) கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் வருகிற 15ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories: