திருத்தணி: திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இதில் ஒரு வார்டு வேட்பாளர் மட்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள, 20 வார்டுகளுக்கும் இம்மாதம், 19 ம் தேதி ஓட்டுப்பதிவு பெற உள்ளன. இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அச்சமின்றி ஓட்டு அளிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்த திருத்தணி நகரத்தில் மாவட்ட எஸ்பி வருண்குமார் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு நடந்தது.திருத்தணி சித்தூர் சாலையில் துவங்கிய போலீசாரின் அணி வகுப்பு அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை, பெரிய தெரு, மேட்டுத் தெரு, ஆறுமுக சுவாமி கோவில் தெரு மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் துப்பாக்கி ஏந்தி பேரணியாக சென்றனர். இப்பேரணி திருத்தணி காந்திரோடு அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளி வரை வந்து நிறைவடைந்தது. பின், பள்ளி வளாகத்தில் அணிவகுப்பு நடத்திய போலீசார் மற்றும் பேண்டு வாத்தியம் வாசித்த போலீசாரை பாராட்டி எஸ்.பி. வருண்குமார் வெகுமதி வழங்கினார்.